எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாளை. குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ரூ.25 கோடியில் மேம்பாலம்

திருநெல்வேலி, ஆக. 6: பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ரூ.25.52 கோடியில் கட்டப்பட உள்ள புதிய மேம்பாலத்துக்கான பூர்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.  திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் போக

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:45 am

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, ஆக. 6: பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ரூ.25.52 கோடியில் கட்டப்பட உள்ள புதிய மேம்பாலத்துக்கான பூர்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

 திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. மாநகராட்சியும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டவில்லை. பேட்டையில் இருந்து சமாதானபுரம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.

 கன்னியாகுமரி சாலையில் உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ரயில்வே கேட் மூடப்படும்போது பெரும் நெரிசல் ஏற்படுகிறது. தினமும் இந்த ரயில்வே கேட் சுமார் 10 முறை மூடித் திறக்கப்படுகிறது.

 மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு புதிய மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதைப் பரிசீலித்த உயர் அதிகாரிகள், புதிய மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கினர்.

 புதிய மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.25.52 கோடியை மத்திய நிதியில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சில நாள்களுக்கு முன் ஒதுக்கியது. பாலத்துக்கான திட்ட வரைவைத் தயாரிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 இப் பாலம் 600 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது; 70 டன் எடையைத் தாங்கும் திறனுடன் கட்டப்படுகிறது. பாலத்துக்குத் தேவையான நிலத்தில் 3.8 ஏக்கர் தனியாரிடம் உள்ளது. இந்த நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 இப் பாலம் வடபுறத்தில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் இருந்து தொடங்கி தென்புறத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அமைகிறது. சிறை முன்பு அம்பாசமுத்திரம் சாலையில் பாலம் இரண்டாகப் பிரிகிறது.

 பாலம் அமையும் இடத்தில் மண்ணின் தன்மையை ஆராயும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வியாழக்கிழமை தொடங்கினர். இப் பணியை 15 நாள்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 "புதிய மேம்பாலம் கட்டும் பணி 7 மாதங்களுக்குள் தொடங்கப்படும். இரு ஆண்டுகளுக்குள் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் ' என நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால், அங்கு ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலும் முழுமையாக குறைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.