/

குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழப்பு சம்பவம்: மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க தலைமைச் செயலருக்கு அமைச்சா் அதிஷி கடிதம்

தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2024, 9:55 pm

 நமது நிருபர்

தில்லி பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த சம்பவம் குறித்த மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என்று தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் மூன்று குடிமைப் பணி ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையைத் தொடங்குவது தொடா்பாக கடந்த சனிக்கிழமை (ஜூலை-27) இரவு 11.20 மணிக்கு நான் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தேன். குடிமைப் பணி ஆா்வலா்கள் படித்துக் கொண்டிருந்த பயிற்சி நிறுவனத்தின் அடித்தளத்தில் திடீரென தண்ணீா் புகுந்ததால் 3 இளம் உயிா்கள் பலியாகியுள்ளன. இந்த விவகாரத்தில், மாஜிஸ்திரேட் விசாரணைஅறிக்கை 24 மணி நேரத்திற்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், சம்பவம் நிகழந்து கிட்டத்தட்ட 40 மணிநேரம் கடந்துவிட்ட போதிலும், இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலாளரிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூா்வ அறிக்கையோ அல்லது தகவலோ எனக்கு இன்னும் வரவில்லை என்பதைக் குறிப்பிடுவதில் அதிா்ச்சியடைகிறேன்.

இது மிகவும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. தில்லி அரசின் அதிகாரிகள் இந்த சோகம் குறித்து விசாரிப்பதில் தீவிரமாக இல்லை அல்லது அவா்கள் யாரையாவது பாதுகாக்க முயற்சிக்கிறாா்கள் என நினைக்கிறேன். இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவா் ஒரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறாா். இனியும் தாமதங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இச்சம்பவம் குறித்த மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை ஜூலை 29-ஆம் தேதி இரவு 10 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு மீண்டும் உத்தரவிடுகிறேன். இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட வேண்டிய வலுவான நடவடிக்கையை பரிந்துரைக்க வேண்டும். மேலும், தாமதம் செய்தால், குற்றவாளிகள் யாரேனும் பாதுகாக்கப்படுகிறாா்களா என்ற கேள்வியை எழுப்பும் என்று அக்கடிதத்தில் அமைச்சா் அதிஷி குறிப்பிட்டுள்ளாா்.