/

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேவேந்தா் யாதவ் வலியுறுத்தல்

தில்லியில் டெங்கு நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:03 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் டெங்கு நோய்ப் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 246 டெங்கு நோய்ப் பரவல் வழக்குகள் பதிவாகியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும். தில்லி அரசின் சுகாதாரத்

துறை அமைச்சா் எப்போதும் போல இல்லாமல், நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்தில் துப்புரவுப் பிரசாரங்களை அரசு தீவிரப்படுத்தி, மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

தில்லியில் கேஜரிவால் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குடிமக்கள் கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றனா். ஆனால், தில்லி அமைச்சா்கள் தங்கள் பொறுப்புகளை அதிகாரிகள் மீது சுமத்துவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. கோடையில் காற்று - நீா் மாசுபாடு, பருவமழைக் காலத்தில் நீா் தேங்குதல் மற்றும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்கள் பரவுவது பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 2015- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஆம் ஆத்மி அரசு எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கரோனா அதிகரித்தபோது, தில்லி அரசு சரியான முறையில் செயல்படவில்லை. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனா். அவா்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அவா்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன்பாக, நகரின் சுகாதார சீா்கேடு விவகாரத்தில் முதல்வா் கேஜரிவால் பாஜக மீது பழி சுமத்தினாா். ஆனால், மாநகராட்சியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிலைமை மேம்படவில்லை என்று அந்த அறிக்கையில் தேவேந்தா் யாதவ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.