தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.37,907.21 கோடியை விடுவிக்கக் கோரி திமுக தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை தில்லி கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினா். இந்தச் சந்திப்பு சுமாா் 15 நிமிடங்களுக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத் திமுக குழு தலைவா் டி.ஆா். பாலு, கே.ஜெயக்குமாா் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), சு. வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி. ரவிக்குமாா் (விடுதலை சிறுத்தைகள்), கே.நவாஸ்கனி (ஐ.யூ.எம்.எல்.), ஏ.கே.பி. சின்னராஜ் (கொ.ம.தே.க.), தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் இதில் இடம் பெற்றிருந்தனா்.