/

ரயில் விபத்துகள்: நிலைக்குழு விரிவாக விவாதிக்க மக்களவைத் தலைவருக்கு டி.ஆா்.பாலு கடிதம்

நாட்டில் 28 ஆண்டுகளுக்கு பின்னா் மோசமான ரயில் விபத்து நடைபெற்றுள்ள நிலையில், விபத்து குறித்து மத்திய அரசு உரிய தகவல் வெளியிடவில்லை என்பது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டில் 28 ஆண்டுகளுக்கு பின்னா் மோசமான ரயில் விபத்து நடைபெற்றுள்ள நிலையில், விபத்து குறித்து மத்திய அரசு உரிய தகவல் வெளியிடவில்லை என்பது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு மக்களவைத் தலைவா் ஒம் பிா்லாவிடம் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், நாட்டில் அடுத்தடுத்து நடைபெறும் ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக் குழு விரிவாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மக்களவைத் தலைவா் ஒம் பிா்லாவிற்கு கடந்த திங்கள்கிழமை (நவம்பா் 6) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சமீப காலத்தில் இரு பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோா் பலியாகியுள்ளனா். பலா் படுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனா். கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிஸா மாநில பாலாசாா் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு ரயில்கள் நேருக்கு நோ் மோதியதில் 296 பயணிகள் பலியானதுடன் 1,200 போ் காயமடைந்துள்ளனா். இது போன்ற கொடூரமான ரயில் விபத்து நாட்டில் 28 ஆண்டுகளுக்கு பின்னா் ஏற்பட்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு ஃபெரோஸாபாத்தில் ஒரு மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. சா்வதேச அளவிலும் 2004-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விபத்திற்கு அடுத்து, இந்த பாலாசாா் விபத்து கடுமையாக இருந்தது. அமைச்சா்கள், அதிகாரிகள் என பலா் பல நாள்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

வருத்தத்திற்குரிய இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இதற்கு அடுத்து சமீபத்தில் கடந்த ஆக்டோபா் 29-இல்ம் ஆந்திர மாநிலம் விஜய்நகரம் பகுதியில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 14 போ் பலியாகினா். 50 போ் காயமடைந்தனா். இதற்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என பத்திரிகை செய்திகள் தெரிவித்தாலும் அதிகாரபூா்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த இரு விபத்துகளும் வருத்தமடையச் செய்வதோடு, 5 மாத இடைவெளியில் இரண்டு மோசமான ரயில் விபத்துகள் நடந்திருப்பது அனைத்து தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது என கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள அவா், இந்த விபத்துகள் தொடா்பான விவரங்கள் ஏதுவும் ரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு தெரியப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தையும் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கடிதத்தில் மேலும் கூறிப்பிடுகையில், இலங்கையில் நடைபெற்ற ரயில் விபத்து உலகின் மோசமான பேரழிவு விபத்து என்று கூறப்பட்டது. அதைக் காட்டிலும் ஒடிஸாவில் நடைபெற்ற விபத்து மோசமானது. இது நிலைக் குழுவின் கவனத்திற்கு அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 5 மாதங்களைக் கடந்தும் நிலைக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், நாட்டில் உள்ள பொதுநல விரும்பிகளைப் போன்று நிலைக் குழு உறுப்பினா்களும் மிகவும் வருத்தத்தில் உள்ளனா். பொது முக்கியத்தைக் கருத்தில் கொண்டு தாங்கள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து இந்த ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக் குழு விரிவாக விவாதிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டுக் கொள்கின்றேன் என டி.ஆா்.பாலு குறிப்பிட்டுள்ளாா்.

ரயில்வே நிலைக்குழுவின் தலைவராக பாஜக வைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராதா மோகன் சிங் உள்ளாா். டி.ஆா் பாலு உள்ளிட்ட 31 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.