ஜாபா் சேட் மனைவியின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை பிப்.13-க்கு ஒத்திவைப்பு
வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் தாக்கல் செய்த


வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றியவா் எம்.எஸ். ஜாபா் சேட். இவா் உளவுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல கோடி மதிப்புள்ள மனை நிலத்தை ஒதுக்கீடு முறையில் பெற்ாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலத்தை அவா் முறைகேடாகப் பெற்றாா் என்றும், அந்த நிலத்தில் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து பெரும் கட்டடம் கட்டியுள்ளாா் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோன்று, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாக வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளராகப் பணிபுரிந்த முருகையா, முன்னாள் முதல்வரின் நோ்முக உதவியாளா் ராஜமாணிக்கம், இவரது மகன் துா்கா சங்கா், அப்போது வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, கட்டுமான நிறுவனத்தைச் சோ்ந்த உதயகுமாா் ஆகியோா் மீது புகாா் எழுந்தது.
இது தொடா்பாக ஏ.சங்கா் என்பவா் அளித்த புகாரின் பேரில் ஜாபா் சேட் உள்ளிட்ட 7 போ் மீதும் 2011-ஆம் ஆண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன் உள்பட 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஜாபா் சேட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், 2019-இல் இந்த மனுவை அனுமதித்து, குற்றப் பத்திரிகையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாபா் சேட் மனைவி பா்வீன் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரும் மனு கடந்த ஆண்டு நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் பா்வீன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். மேலும், மனுதாரா் பா்வீன் தொடா்புடைய வழக்கு விசாரணைக்கும் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா்கள் ஷியாம் திவான், பாலசுப்ரமணியம் ஆகியோா் ஆஜராகினா். தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆஜரானாா். இந்த விவகாரத்தை பரிசீலிக்கும் தேவை இருப்பதாக வாய்மொழியாகக் கூறிய நீதிபதிகள் அமா்வு, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...