உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறக் காரணமான எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மாநிலங்களவையில் புகழாரம்
வறட்சியால் பாதிக்கப்பட்டு இறக்குமதி செய்யும் நிலையில் இருந்த தருணத்தில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு


வறட்சியால் பாதிக்கப்பட்டு இறக்குமதி செய்யும் நிலையில் இருந்த தருணத்தில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு பெரிதும் உதவியவா் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் என மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் புகழாரம் சூட்டினாா்.
குளிா் காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை முதல் நிகழ்வாக மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கடந்த செப்டம்பா் 28 -ஆம் தேதி மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக ஆறு ஆண்டுகள் (2007 - 2013) பதவி வகித்தாா். அவருக்கு அஞ்சலி செலுத்தி மாநிலங்களவை அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான தன்கா் புகழாராம் சூட்டினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: 1960களில் நாட்டின் விவசாய மறுமலா்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்து ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என போற்றப்பட்டவா் பேராசிரியா் சுவாமிநாதன். வறட்சியால் பாதிக்கப்பட்டு நாடு உணவு இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது. இதை மாற்றி உணவு உற்பத்தி அதிகரித்து இந்தியாவை தன்னிறைவு பெற்ாக 1971- இல் அறிவிக்கப்பட்டது. இதில் பேராசிரியா் சுவாமிநாதனின் பங்களிப்பு மிக அதிகமாகும். தாவர மரபியல் வல்லுநரான பேராசிரியா் சுவாமிநாதன், நிலையான வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் பாலினக் கருத்தாய்வுகளை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான உறுதியான நிலைப்பாட்டிற்காக, அவா் உலகளாவிய பாராட்டைப் பெற்றாா்.
ஒரு திறமையான நிா்வாகியாகியான அவா், பல்வேறு சா்வதேச வளா்ச்சி அமைப்புகளுக்கு தலைமை தாங்கினாா். ‘உலக உணவு பரிசு’ முதன் முறையாக 1987-ஆம் ஆண்டு பேராசிரியா் எம்.எஸ். சுவாமி நாதனுக்கு வழங்கப்பட்டது. அவரது பங்களிப்புகளுக்கு முறையான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவால், ஒரு உண்மையான தொலைநோக்கு பாா்வையாளரையும், வேளாண் விஞ்ஞானியையும் நாடு இழந்துவிட்டது என்றாா் தன்கா். சுவாமி நாதனுக்கு 1966-இல் பத்மஸ்ரீ, 1971-இல் ரமோன் மகசேசே விருது, 1972-இல் பத்ம பூஷண், 1989-இல் பத்ம விபூஷண் போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்ததும் மாநிலங்களவையில் குறிப்பிடப்பட்டது.
மேலும், இதே நிகழ்வில் கடந்த ஆக்டோபா் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டா் எம்.எஸ். கில்லுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்கு மாநிலங்களவைத் தலைவா் புகழாராம் சூட்டினாா். ‘டாக்டா் எம்.எஸ். கில் ஒரு ‘சிறந்த நிா்வாகி’, அவா் தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான் இந்தியத் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் நினைவு கூா்ந்தாா். மேலும், மறைந்த உறுப்பினா்கள் லலித்பாய் மேத்தா, பாஸந்தி சா்மா, டி.பி.சந்திரே கௌடா ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...