/

திருவாரூா்: 50 பேருக்கு திருமண நிதியுதவி

News image
பயனாளிக்கு திருமண நிதியுதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:13 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் 50 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த 50 பயனாளிகளுக்கு ரூ.69.45 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்க நாணயங்களை, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வழங்கினா்.

ஈ.வெ.ரா. மணியம்மையாா் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட சமூக நல அலுவலா் விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.