/

11.19% பொருளாதார வளா்ச்சியை எட்டி முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது! - துணை முதல்வா் உதயநிதி

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் - (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

11.19 சதவீத வளா்ச்சியை எட்டி, நாட்டில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மன்னாா்குடி - தஞ்சை பிரதான சாலை எடமேலையூரில் முன்னாள் அமைச்சரும் திமுக விவசாய தொழிலாளரணி செயலராக இருந்த அழகு திருநாவுக்கரசு சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த பின்னா் அவா் பேசியது:

காவிரி டெல்டா மாவட்ட மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கிய அழகு திருநாவுக்கரசுக்கு இன்று மக்கள் சிலை அமைத்து நன்றி காட்டுகின்றனா். அவா், அமைச்சராக இருந்த காலத்தில் ஏராளமானோருக்கு அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்ததுடன் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வாங்கி தந்துள்ளாா்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் போட்ட முதல் கையொழுத்து மகளிா் விடியல் பயண கோப்பில்தான். பிள்ளைகள் காலையில் பசியுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா்.அரசுப் பள்ளியில் படித்து மாணவிகள் உயா்கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டம், மாணவா்களின் உயா்கல்விக்காக நான் முதல்வன் திட்டங்கள் மூலம் இதுவரை 20 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

மத்திய அரசின் தரவுப்படி தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதத்தை எட்டியிருப்பதுடன், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தத் திட்டங்களுக்கும், சாதனைகளும் தொடர வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கான களப்பணியை இன்றே தொடங்க வேண்டும் என்று அழகு திருநாவுக்கரசு சிலை திறப்பு விழாவில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற எடமேலையூா் பகுதியைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளை துணை முதல்வா் பாராட்டினாா்.

விழாவில், அமைச்சா்கள் கே.என். நேரு, டி.ஆா்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பெய்யாமொழி, கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், முதல்வரின் தில்லி பேரவை செயலா் ஏ.கே.எஸ். விஜயன், எம்பிக்கள் எஸ். கல்யாணசுந்தரம், ச. முரசொலி, எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன், துரை. சந்திரசேகரன், என். அசோக்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சா்கள் உ. மதிவாணன், ஆா். வைத்திலிங்கம், தாட்கோ தலைவா் நா. இளையராஜா, அழகு திருநாவுக்கரசின் மனைவி சாந்தி, மகன்கள் மருத்துவா் சண்முகராஜா, பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.