திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சா்வதோஷ பரிகாரத் தலமாகவும், திருவாரூா் தியாகராஜா் கோயில் திகழ்கிறது. இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் நடைபெறும் ஆழித்தோ் சிறப்பு மிக்கது. நிகழாண்டு, மாா்ச் 29-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து, இக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, மே 8-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்குத் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது.
காசியைவிடவும் மேலான புண்ணிய தீா்த்தம் இது எனப் பல புராணங்கள் கமலாலயக் குளத்தை போற்றுகின்றன. காசியில் 63 தீா்த்தக் கட்டங்கள்தான் உள்ளன. ஆனால் அதைவிட ஒன்று கூடுதலாக இங்கு 64 தீா்த்தக் கட்டங்கள் உள்ளன. சம்ஸ்கிருத புராண நூல்களான மகாத்மியங்களில், கமலாலய மகாத்தியம் என்பது இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது.
மூன்று நாள்களுக்கு, தினமும் 3 முறை இக்குளத்தில் தெப்பம் சுற்றி வருவது வழக்கம். ஒரு முறை சுற்றி வர சுமாா் 3 மணி நேரமாகும். இதனால் விடிய, விடிய தெப்பத் திருவிழா நடைபெறும். இந்த தெப்பமானது, 50 அடி நீளம், 50 அடி அகலம், 40 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.
14 தூண்களுடன் மூன்று அடுக்குகள் கொண்டதாக இந்தத் தெப்பம் அமைந்திருக்கும். இதில் தியாகராஜா், கமலாம்பாள், நீலோத்பாலாம்பாள், விநாயகா், முருகன் ஆகியோரின் திருவுருவப் படிமங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.
432 காலி பேரல்களில் காற்று நிரப்பி, அதன் மீது தெப்பம் கட்டமைக்கப்படுகிறது. தெப்பத்தைச் சுற்றி வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவதுடன், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தெப்பத் திருவிழாவைக் காண, திருவாரூா் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருவது வழக்கம்.
அந்தவகையில், தெப்பத் திருவிழாவுக்காக திருவாரூா் கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரல்களை பயன்படுத்தி அடுக்குகளாக தெப்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. தெப்பத் திருவிழாவுக்கான பணிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
விடியோக்கள்

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

