/

கூத்தாநல்லூர் வீடுகளில் சமூக இடைவெளியுடன் ரமலான் தொழுகை

கூத்தாநல்லூரில் ரமலான் தொழுகையை வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் நடத்தினர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

DIN

கூத்தாநல்லூரில் ரமலான் தொழுகையை வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் நடத்தினர். 

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை ரமலான் பண்டிகையாகும். ரமலான் மாதம் முழுக்க 30 நாட்களும், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் பகல் முழுக்க உண்ணாமல், உறங்காமல், பருகாமல் பள்ளிவாயில்களுக்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். 30 நாள்களின் நோன்பால் உடலிலும், உள்ளத்திலும் மாற்றம் ஏற்படும் என அல்லாஹ் சொன்னதன் அடிப்படையில் அனைவரும் நோன்பு நோற்கின்றனர்.

மேலும், இறை நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். பிறை தெரிந்த பிறகு, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். ரமலான் பண்டிகையன்று, பள்ளி வாயில்களிலும், மிகப் பெரிய மைதானங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, தொழுகை நடத்துவார்கள். தொழுகைக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொள்வார்கள். இது தான் வழக்கமான ஒன்று. ஆனால், இந்த ஆண்டின் ரமலான் பண்டிகை மாற்றத்துடன் நடைபெற்றது. கரோனா தொற்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வாயில்கள் மூடப்பட்டுள்ளன. 

அதனால், இஸ்லாமியர்கள் 5 கால தொழுகையையும், தங்களது வீடுகளிலேயே நடத்தி வந்தனர். தொழுகை நடத்துவதற்கான பாங்கு எனச் சொல்லக் கூடிய, அழைப்பு ஒலி மட்டும் பள்ளிவாயில்களிலிருந்து எழுப்பப்படும். அதைத் தொடர்ந்து வீடுகளில் தொழுகை நடத்தி வந்தனர். ரமலான் மாதத்திலும் பள்ளி வாயில்களில் கஞ்சியும் காய்ச்சப் படவில்லை. தொழுகையும் நடத்தப்படவில்லை. கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள பள்ளி வாயில்கள் மூடப்பட்டதால், ரமலான் மாதம் முழுக்க வீடுகளிலேயே தொழுதனர். 

தொடர்ந்து, திங்கள்கிழமை ரம்ஜான் தொழுகையை அவரவர் வீடுகளிலேயே, சமூக இடைவெளி விட்டு, தொழுகை நடத்தினர். தொழுகையைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.