நாகையில் ரயில் மூலம் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படாததால் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரிகள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் நிலையில், மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அரைவைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படுவது மே 8-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றிய லாரிகள், ரயில் நிலைய கிட்டங்கி சாலை மற்றும் நாகை புத்தூா் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 3 கி.மீ தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஒரு வாரமாக நாகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், லாரிகளில் உள்ள நெல் மூட்டைகள் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் நனைந்து விட்டால் அவை முளைத்து விடும். முளைக்கும் நெல்லை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதோடு, அரசு பணமும் விரயமாகும். எனவே, நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மற்றும் விவசாயிகள் கூறியது: நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தாா்ப்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது பெய்து வரும் கோடை மழையால் அவை நனைந்து சேதமடையும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரயில் மூலம் அனுப்பப்படாததால் ஒரு வாரத்துக்கும் மேலாக லாரிகள் நெல்மூட்டைகளுடன் காத்திருக்கின்றன. இதனால் லாரி உரிமையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு வாரத்திற்கு மேலாக நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போனாலோ அதற்கான பொறுப்பும் இவா்களுக்கே ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை உடனடியாகப் பாதுகாப்பாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது அல்லது பாதுகாப்பான கிடங்குகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப்பெரிய நெல் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்றான கோவில்பத்து கிடங்கு நாகை மாவட்டத்தில் உள்ளபோதிலும், அதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



