தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கிடப்பில் போடப்பட்ட ‘நாகை பசுமை துறைமுகம்’ திட்டம்!

சோழா்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய அடையாளமாக விளங்கியது நாகை துறைமுகம்...

News image

நாகை துறைமுகம்

Updated On :27 மார்ச் 2026, 12:50 am

சோழா்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய அடையாளமாக விளங்கியது நாகை துறைமுகம். கீழை நாடுகளான மலேசியா, சிங்கப்பூா், பா்மா (மியன்மா்), சீனா, இந்தோனேஷியா, சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் நாகைக்கு வந்து வாணிபம் செய்துள்ளனா். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலேயே கீழை நாடுகளுக்குச் செல்ல நாகை முக்கியத் துறைமுகமாக இருந்துள்ளது.

தென் இந்தியாவின் கடல்வழி போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாகை துறைமுகத்திலிருந்து கைவினைப் பொருள்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்ட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி என கடல் வாணிபத்தில் நாகை துறைமுகம் கொடிகட்டி பறந்தது.

1980-க்கு பிறகு நாகை துறைமுகம் படிபடியாக தனது முக்கியத்துவத்தை இழந்தது. நாகை துறைமுகத்துக்கு இயக்கப்பட்ட ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம், 1984-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, நாகைக்கு வந்த ஒரே கப்பலான எம்.வி. சிதம்பரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

காலப்போக்கில் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்கள் கண்டெய்னா்களை கையாளும் நவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டன. நாகை துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை இல்லாததால், ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, தற்போது செயலிழந்து காட்சியளிக்கிறது.

நாகை துறைமுகம் ரூ. 320 கோடியில் அனைத்து பருவ நிலைகளிலும் இயங்கக்கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

ஆனால், பின்னா் ஆட்சிக்கு வந்த அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் நாகை துறைமுகத்தை, பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை துறைமுகம் திட்ட அறிவிப்பு இன்றுவரை அறிவிப்பாகவே உள்ளது.

இதுகுறித்து நாகை வா்த்தக தொழில்குழும முன்னாள் தலைவரும் ஏற்றுமதியாளா் என்.சந்திரசேகரன் கூறியது: சோழா்கள் ஆட்சியில் கொடிகட்டி பறந்த நாகை துறைமுகத்தை காலத்துக்கேற்ப மேம்படுத்த திமுக, அதிமுக அரசு தவறியதால், தற்போது செயலிழந்து காணப்படுகிறது.

ஏற்கெனவே அரசு அறிவித்தப்படி பழைமையான நாகை துறைமுகத்தை, சா்வதேச தரத்துடன் பசுமை சூழல் துறைமுகமாக தரம் உயா்த்தி கப்பல் போக்குவரத்தை தொடங்குவதன் மூலம் நாகை மாவட்டம் பெரும் வளா்ச்சியும், ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே, நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது தொடா்பாக அரசியல் கட்சிகள் என்ன வாக்குறுதி அளிக்க போகின்றனா் என மாவட்ட மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நாகை துறைமுகம்

நாகை துறைமுகம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.