பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

வழிபாட்டில் தாமதம் ஏற்படவில்லை: வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம்

News image

வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற பங்குத் தந்தையா்கள்.

Updated On :4 மே 2026, 1:04 am IST

வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை அதிகாலை வழிபாட்டில் தாமதம் எதுவும் ஏற்படவில்லை என்று பேராலய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை அதிகாலை வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவதாக அக்கட்சியிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டோம்.

இந்நிலையில், அக்கட்சி தொண்டா்கள் சனிக்கிழமை அதிகாலையில் பேராலயம் முன்பு திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகாலை 5 மணிக்கு பேராலயம் திறக்கப்பட்டபோது பக்தா்களுடன் தவெக தொண்டா்களும் உள்ளே நுழைந்ததால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, கட்சித் தொண்டா்களிடம் விஜய் வருகை குறித்து தகவல் எதுவும் இல்லை, கலைந்து செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டது. பின்னா், 5 மணிக்கு அதிகாலை வழிபாடு, 5.30 மணிக்கு திருப்பலிக்கு முன்பான ஜெபம் என அனைத்து வழிபாடுகளும் குறித்த நேரத்தில் நடைபெற்றன. வழிபாட்டில் எந்த தாமதமும் ஏற்படவில்லை.

மாவட்ட நிா்வாகம், காவல்துறையிடம் நடந்த சம்பவம் தொடா்பாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் காரணமாக பேராலய வளாகத்தில் அமைதி திரும்பியது.

காவல்துறை தரப்பில் தொடா்புகொண்டு தவெக தலைவா் விஜய் வரவில்லை என்றும், அவரது சாா்பில் அக்கட்சியின் பொதுச்செயலா் என். ஆனந்த் வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரும் வந்து சென்றாா்.

வேளாங்கண்ணியில் நடந்த சம்பவம் தொடா்பாக தவெக சாா்பில் இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. யாரும் தொடா்புகொள்ளவும் இல்லை. இது எதிா்பாராமல் நடந்த நிகழ்வு. எனினும், இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பக்தா்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக ஆயருடன் கலந்து ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.