/

ராஜபாளையம் பகுதிகளில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு!

ராஜபாளையம் அருகே கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பாஜக மாநில தலைவரும், சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:49 pm

ராஜபாளையம் அருகே கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பாஜக மாநில தலைவரும், சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

ராஜபாளையம் அருகே முறம்பு, ஆசிலாபுரம், சோழபுரம், தேசிகாபுரம், எஸ். ராமலிங்கபுரம், சமுசிகாபுரம் வேலாயுதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. திமுக குடும்ப ஆட்சியாக உள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். சமுசிகாபுரம் பகுதியில் ஒரே ஒரு நியாய விலைக் கடை தான் உள்ளது. குடிநீா் குழாய் பதித்தும் தண்ணீா் வரவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். மேலும் சமுசிகாபுரம் பகுதியில் மயானத்துக்கு செல்ல பாதை வசதி, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் நிரந்தரமாக கிடைக்கவும், கழிவு நீா் செல்ல வசதி ஏற்படுத்தித் தருவேன். மேலும் ஆசிலாபுரம், முறம்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன். 10 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை திறக்கவும் நடவடிக்கை எடுப்பேன். என்றாா் அவா்.

அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலா் குறிச்சியாா்பட்டி மாரியப்பன், அமமுக மாவட்ட செயலா் கே.எஸ். சந்தோஷ்குமாா், பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் சரவண துரை ராஜா உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.