விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மக்காச்சோளம் சாகுபடி
பராமரிப்பு செலவு குறைவு, அதிக மகசூல் மற்றும் சந்தை வாய்ப்பால் விருதுநகர் மாவட்டத்தில்


பராமரிப்பு செலவு குறைவு, அதிக மகசூல் மற்றும் சந்தை வாய்ப்பால் விருதுநகர் மாவட்டத்தில் மக்காளச்சோளம் பயிரிடும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1.40 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களில்,
மானாவாரியிலும், கிணற்றுப் பாசனத்திலும் சுமார் 1.20 லட்சம் ஹெக்டேரில்
நெல், கடலை, கம்பு, சோளம், மக்காச்சோளம், கேப்பை, குதிரைவாலி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
நிகழாண்டில் விதைப்பு நாள் முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்ததால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசனத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகவும், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் மானாவாரியில் குறைந்த அளவிலும் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இந்த சாகுபடிக்கு உரம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. மேலும், விதைப்பு நாளிலிருந்து 30 நாள்களுக்கு பராமரித்தாலே போதும். அவ்வப்போது மழை பெய்தால் செலவு செய்த தொகைக்கு ஏற்ப சாகுபடியும் அதிகரிக்கிறது. எனவே நஷ்டம் இருக்காது என்பதால் விவசாயிகளின் விருப்பப் பயிராக மக்காச்சோளம் உள்ளது.
மாவட்டத்தில் மக்காச்சோளம் 1.20 லட்சம் டன் உற்பத்திக்கு இலக்கு நிர்ண
யிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட அதிகமாகவே சாகுபடி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரி முனீஸ்வரன் கூறுகையில், அரசு தானிய வகைகளை அதிகம் உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தானிய வகையான மக்காச்சோளத்தில் கார்போஹைட்ரேட் என்ற மாவு சத்து, புரோட்டீன் சத்து, கண்பார்வைக்கான விட்டமின்-எ, குழந்தைகளுக்கான சத்து மாவு தயாரிக்க பயன்படுகிறது. அதேபோல், தாது பொருள்கள் சத்து நிறைய உள்ளதால் கால்நடை தீவனம் தயாரிக்க இதன் தேவை அதிகரித்து வருகிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் சாகுபடியும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
கொள்முதல் நிலையம் தேவை
சிவகாசி வட்டார நீர்ப்பாசன சங்கத் தலைவரும், மக்காச்சோள விவசாயியுமான ராமானுஜம் கூறியதாவது:
சன்னரக மக்காச் சோளத்தை மானாவாரியில் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு 19 முதல் 22 குவின்டாலும், கிணற்றுப் பாசனத்தில் பயிரிட்டால் 25 முதல் 30 குவின்டாலும் மகசூல் கிடைக்கும். வீரிய ஒட்டு ரகம் விதைத்தால் மானாவாரியில் 25 முதல் 30 குவின்டாலும், பாசனத்தில் 36 முதல் 40 குவின்டால் வரையிலும் மகசூல் கிடைக்கும். இப்பயிர் செய்தால் அதிக வேலைப்பளு இருக்காது, பராமரிப்பு செலவும் குறைவு.
இன்னும் இரண்டு வாரங்களில் அறுவடை தொடங்க உள்ளது. இதன் தேவையும் அதிகமாக இருக்கிறது.
மக்காச் சோளத்திற்கு மத்திய அரசு ஒரு குவின்டாலுக்கு ரூ.1400 விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, வெளிமார்க்கெட்டில் ரூ.1350 ஆக உள்ளது. அறுவடை நேரத்தில் வியாபாரிகள் "கூட்டு' அமைத்து குறைவான விலையை நிர்ணயம் செய்வார்கள். இதைத் தடுக்கும் வகையில் அரசே கொள்முதல் நிலையம் அமைத்து வாங்கினால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார்.
திகரிக்கும் - சாகுபடி பரப்பளவு
ஆண்டு ஹெக்டேர்
2010-1111,775
2011-1217,205
2012-1323,483
2013-1424,263
2014 -15 18,181
கிணற்றுப்பாசனத்தில் விதைப்பு பணிகள் நடந்து வருவதால் பரப்பளவு அதிகரிக்கும்.
தகவல்: வேளாண்மைத் துறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...