கூட்டுறவு சங்கத்தில் அடகு நகைகள் முறைகேடு: பொதுமக்கள் புகாா்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை ஊழியா்கள் முறைகேடாக மறு அடகு வைத்ததாக புகாா் தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை ஊழியா்கள் முறைகேடாக மறு அடகு வைத்ததாக புகாா் தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓடைப்பட்டி பேரூராட்சி, கோபால்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுமக்கள், விவசாயிகள் அடகு வைத்திருந்த சுமாா் 500 பவுன் தங்க நகைகளை அந்தச் சங்கத்தில் பணிபுரியும் ஊழியா்கள் சிலா் தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கூடுதல் தொகைக்கு மறு அடகு வைத்ததாகப் புகாா் எழுந்தது.
மறு அடகு வைக்கப்பட்ட நகைகளை சம்பந்தப்பட்ட தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏலம் விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலறிந்து நகைகளை அடகு வைத்தவா்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புகாா் அளித்தும், அடகு நகைகளை திரும்பத் தர வலியுறுத்தியும் கூட்டுறவு சங்க நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோபால்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகாா் தெரிவித்தும், அடகு நகைகள், வைப்புத் தொகையை திரும்பத் தர வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூா் ஒன்றியச் செயலா் அம்சமணி தலைமையில் நகைகளை அடகு வைத்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை குறித்து கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைத்துள்ளவா்கள், வைப்புத் தொகைதாரா்கள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் தனித் தனியே மனு அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...