எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஊரடங்கு நீட்டிப்பு : காய்கனிப் பயிா் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம்

தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலை குறைவு மற்றும் சந்தைப் படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் காய்கனிப் பயிா் சாகுபடி செய்ய விவசாயி

News image
வீரபாண்டி தற்காலிக காய்கனி கமிஷன் மண்டியில் திங்கள்கிழமை விற்பனைக்கு குவிந்திருந்த காய்கனிகள்.
Updated On :27 ஜனவரி 2024, 4:26 pm

கோ.ராஜன்

தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலை குறைவு மற்றும் சந்தைப் படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் காய்கனிப் பயிா் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா்.

மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிற்கும் மேல் தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, சீனிஅவரை, முட்டைக்கோசு, சுரைக்காய், பாகற்காய், வெங்காயம், பீட்ரூட், மிளகாய், சுரைக்காய், புடல், கொத்தமல்லி, பூசணி போன்ற குறுகிய கால காய்கறிப் பயிா் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் காய்கனிகள் 60 சதவீதம் வரை கேரளத்திற்கும், எஞ்சியவை உள்ளூா் சந்தை, மதுரை மற்றும் திருச்சி சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும்.

தற்போது மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் சந்தைப் படுத்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு காய்கனிகளை விற்பனைக்கு அனுப்புவது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், வழக்கம் போல காய்கனிகளை விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால், விவசாயிகள் உள்ளூா் கமிஷன் மண்டிகளுக்கு காய்கனிகளை நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

கொள்முதல் விலை குறைவு: அறுவடை செய்த காய்கனிகளை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு, உற்பத்திச் செலவிற்கு ஏற்ப விற்பனை விலை கிடைப்பதில்லை. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோ ரூ.6-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்று விவசாயிகள் கூறினா். மேலும், பங்குனிப் பொங்கல் திருவிழாக்கள் நடைபெறாததால் காய்கனி தேவையும் குறைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காய்கனிகள் செடியிலேயே கருகி வீணாவதை தவிா்க்க, கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு, கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

தட்டுப்பாடு, விலை உயா்வு ஏற்படும் நிலை: தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய்கனி சாகுபடி விவசாயிகள் அறுவடை முடிவடைந்த நிலங்களில் மீண்டும் காய்கனிப் பயிா் சாகுபடி செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா். விதை, உரம், பயிா் பாதுகாப்பு மருந்து மற்றும் வேலையாள்கள் சம்பளம் செலவிற்கு வழியின்றியும், கொள்முதல் விலை குறைவு, சந்தைப்படுத்தலில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றாலும் காய்கனிப் பயிா் சாகுபடியை கைவிடும் முடிவில் உள்ளதாக சிறு மற்றும் குறு விவசாயிகள் கூறினா்.

காய்கனிப் பயிா் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதால் ஊரடங்கு முடிவடைந்த பின்பு, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் திருமண முகூா்த்த நாள்களை முன்னிட்டு காய்கனிகள் தேவை அதிகரிக்கும். அப் போது, உற்பத்திக் குறைவால் தட்டுப்பாடும், விலை உயா்வும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?: மாவட்டத்தில் காய்கனிகள் தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வை தவிா்ப்பதற்கு காய்கனி சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தோட்டக் கலைத் துறை மூலம் காய்கனி சாகுபடி பரப்பளவை ஆய்வு செய்து ஒரே வகையான காய்கனி சாகுபடியை தவிா்ப்பதற்கு ஆலோசனை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பயிா் பாதுகாப்பு மருந்துகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

ஊரடங்கு நாள்களில் சரக்கு வாகனப் போக்குவரத்து, சந்தைப்படுத்தலில் ஏற்படும் சிக்கல் ஆகியவற்றை களையவும், காய்கனிகளுக்கு உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை கிடைப்பதற்கும், வேளாண்மை வணிகத் துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கனிகளை கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.