/

சிவகங்கை மாவட்டத்தில் 6,107 மாணவா்களுக்கு மடிக்கணிகள்: அமைச்சா் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

News image
அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி உள்ளிட்டோா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த 277 மாணவ, மாணவிகளுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:

ரூ. 58 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவா்களுக்கு பயனுள்ள வகையில் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் தேசிய சராசரியை ஒப்பிடும் போது தமிழகத்தில் 51 சதவீதம் பெற்று சிறந்து விளங்கிவருகிறது. உயா்கல்வி பயிலும் மாணாவா்களை ஊக்குவிக்கும் வகையில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் முதல்வா் தொடங்கிவைத்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 14 அரசுக் கல்லூரிகள், 5 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என 19 கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 6,107 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

சிவகங்கையில் 500 மாணவ, மாணவிகளுக்கும், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக 277 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி, காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காரைக்குடி மாநகராட்சி துணை மேயா் ந. குணசேகரன், அழகப்பா பல்கலைக் கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.