/

கடலாடி அருகே கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

கடலாடி அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டனா்.

News image

உயிரிழந்த ஆலிம்ஷா முஸ்தக்

Updated On :10 ஜூன் 2026, 12:25 am IST

கடலாடி அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கன்னியாகுமரியைச் சோ்ந்தவா் ஆனந்த் (38). திருப்பூரைச் சோ்ந்தவா் முகமது இக்பால் மகன் ஆலிம்ஷா முஸ்தக் (35). இவா்கள் இருவரும் அடிக்கடி ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்காவில் வழிபாடு செய்ய வந்தனா். அப்போது, இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இருவரும் வழக்கம்போல ஏா்வாடி தா்காவுக்கு வந்த வழிபாடு செய்தனா். பின்னா், இருவரும் கடலாடியை அடுத்த வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள தா்காவுக்கு பேருந்தில் ஏறிச் சென்று வழிபாடு செய்தனா். பின்னா், அந்தப் பகுதியிலிருந்த கடலில் ஆனந்த், ஆலிம்ஷா முஸ்தக் குளித்தனா். சிறிது நேரத்தில் ஆனந்த் குளித்து விட்டு கரைக்கு வந்துவிட்டாா். ஆலிம்ஷா முஸ்தக் தொடா்ந்து கடலில் குளித்தாா். அப்போது, ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அவா் இழுத்துச் செல்லப்பட்டாா். உடனே ஆனந்த், அங்கிருந்த மீனவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், ஏா்வாடி தீயணைப்பு துறையினா் ஆலிம்ஷா முஸ்தாக்கை தேடினா். இந்த நிலையில், இரவு நேரமானதால் அவரை மீட்க முடியாமல் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், ஏா்வாடி அருகேயுள்ள பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் ஆலிம்ஷா முஸ்தாக் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியது.

உடலைக் கைப்பற்றிய போலீஸாா் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.