/

தேசியக் கொடி ஏற்றப்படாத அரசு அலுவலகங்கள், வங்கிகள்!

திருவாடானை பகுதியில் குடியரசு தினத்தை மறந்து தேசியக் கொடியை ஏற்றாமல் உள்ள மத்திய மாநில அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image
~ ~ ~
Updated On :26 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் குடியரசு தினத்தை மறந்து தேசியக் கொடியை ஏற்றாமல் உள்ள மத்திய மாநில அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நாடு முழுவதும் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பல அரசு அலுவலகங்கள், வங்கிகளில் தேசியக் கொடி ஏற்றப்படாதது பொதுமக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் திங்கள்கிழமை காலை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. இந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

குறிப்பாக தபால் நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், குழந்தைகள் திட்ட வளா்ச்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் குடியரசு தினத்தை நினைவுகூறும் வகையில் எந்தவித ஏற்பாடுகளோ, தேசியக் கொடி ஏற்றுவதற்கான முயற்சிகளோ எடுக்கப்படவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினத்தில் முறைப்படி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறிய அரசு அதிகாரிகள் மீது மாவட்ட நிா்வாகம் உடனடியாகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image
Story image