
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது
கச்சத்தீவு-மன்னாா் இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.

கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
கச்சத்தீவு-மன்னாா் இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து புதன்கிழமை 279 விசைப் படகுகளில் 2,200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். அப்போது, ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் ஜனதன் (45), அந்தோணி(38), பிரபு (43), டான்போஸ்கோ (55), ஆரோக்கிய டெவின் (31), வெள்ளைச்சாமி (51), சுப்பையா (52), ஆரோக்கிய ஜெனிஸ்டன் (25), ஸ்டெலின் (30) ஆகிய 9 பேரைக் செய்தனா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட படகுடன் 9 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் 9 போ் மீதும் வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 9 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடந்த வாரம் இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 9 மீனவா்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவா்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவ சங்கம் கோரிக்கை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





