கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
தமிழகத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி முதல் விடப்பட்டது. விடுமுறைக்குப் பின், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் ஜூன் 4-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனா். இவா்களை ஆசிரியா்கள் வரவேற்றனா்.
மேலும், புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளை பூக்கள் தூவி வரவேற்றனா்.
இந்த நிலையில், பள்ளி திறந்த முதல் நாளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இதேபோல, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினா்.
இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










