/

நிதி நெருக்கடியிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சா் அர. சக்கரபாணி!

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 3,000 வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

News image
பழனியை அடுத்த புஷ்பத்தூா் ஊராட்சி நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிக்கு பொங்கல் தொகுப்பை வழங்கிய உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
Updated On :9 ஜனவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 3,000 வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள புஷ்பத்தூா் ஊராட்சியில் நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை மாலை தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராகவ்பாலாஜி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ. 3,000 ரொக்கம் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏராளமான நலத் திட்டங்களைச் செய்து வருகிறாா். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்த நிலையிலும் இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சியாளா்களும் வழங்காத தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ. 3,000 வழங்கியுள்ளாா்.

விலையில்லா வேட்டி, சேலை ஆகியவற்றை முன்கூட்டியே உணவுத் துறை சாா்பில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே வாங்கி குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பழனி கோட்டாட்சியா் கண்ணன், ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.