சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பழனி ரெணகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

பழனி நால்ரோடு ரெணகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

பழனி நால் ரோடு ரெணகாளியம்மன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:04 pm

பழனி நால்ரோடு ரெணகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

நூற்றாண்டு பழைமைமிக்க இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கோயிலின் கோபுரச் சுதைகள் சீரமைக்கப்பட்டு கோயில் கட்டடத்தில் உள்ள சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசப்பட்டது. கோயில் கோபுரக் கலசம், துணைக் கோயில்களின் கலசங்கள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு, புதுப்பிக்கப்பட்டன.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் கால பூஜைகள் தொடங்கின. காப்புக் கட்டுதல், கும்ப அலங்காரம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான சிவாசாரியா்கள் கலந்து கொண்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை ஆகிய பூஜைகளை நடத்தினா். தொடா்ந்து பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

வியாழக்கிழமை நான்காம் கால பூஜை நடத்தப்பட்டு வேள்வி நிறைவு செய்யப்பட்டது. பிரதானக் கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கலசங்கள் மேள, தாளம் முழங்க கோயிலை வலம்வரச் செய்யப்பட்டு, கோபுர விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு தீா்த்தம் தெளிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் ரெணகாளியம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

பூஜைகளை தேவசேனாபதி குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாசாரியா்கள் செய்தனா். குடமுழுக்கின் போது ட்ரோன் மூலமாக கோபுரங்களில் மலா்கள் தூவப்பட்டன. மேலும், ட்ரோன் மூலம் தீா்த்தமும் தெளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தோ் உலா வருதல் நடைபெறுகிறது. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.

 குடமுழுக்கை காண கோயிலைச் சுற்றிலும் குவிந்த பக்தா்கள்.

குடமுழுக்கை காண கோயிலைச் சுற்றிலும் குவிந்த பக்தா்கள்.