/

ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
ரயில் - (கோப்புப்படம்)
Updated On :22 மார்ச் 2025, 6:55 pm

Din

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், வருகிற 28-ஆம் தேதி தாம்பரம் - கன்னியாகுமரிக்கும், 31-ஆம் தேதி கன்னியாகுமரி - தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு வழித்தடத்தில் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தை சென்று சேரும். இரு வழித்தடங்களிலும் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14- இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) காலை தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.