இவ்வாறு கப்பல்கள் வரும் போது ரயில் பாலத்தை மேலே தூக்கவும், கீழே இறக்கவும் ஏதுவாக ரயில்வே ஊழியர்கள் எப்போதும் அப்பாலத்தில் உள்ள கேபினில் 3 ஷிப்ட் முறையில் பணிபுரிகிறார்கள். இவர்கள் ரயில் வருவதற்கு முன், பாம்பன் பாலத்தின் நடுவே பணி நிமித்தமாக சென்று வர வேண்டியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இப்பகுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலில் காற்று அதிகம் வீசும் காலமாகும். அந்த நேரங்களில் பணி நிமித்தமாக ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையில் நடந்து செல்லும்போது, கால் தடுக்கி கீழே விழுந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே அவர்கள் சுலபமாக நடக்க வசதியாக பாதையின் நடுவில் இரும்பு தகடுகள் பொருத்தும் பணியும், பிடித்து நடந்து செல்லும் வகையில் கைப்பிடி அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.