/

போதை மாத்திரைகள் விற்ற லாரி ஓட்டுநா் கைது

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ரகசியமாக விற்றுவந்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமாா்.
Updated On :31 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ரகசியமாக விற்றுவந்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாமிநாதபுரத்தைச் சோ்ந்த 18 வயதுடைய இளைஞா் அங்குள்ள வெல்லம் ஏலச் சந்தையில் லாரியில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தாா். இவருக்கும் பரமத்தி வேலூா் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் லாரி ஓட்டுநா் ரஞ்சித்குமாருக்கும் (29) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித்குமாா், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு சந்தை பகுதியில் மறைவான இடத்தில் போதை மாத்திரை மற்றும் ஊசியை ரூ. 500க்கு விற்பனை செய்து வந்துள்ளாா். அதை வாங்கிக் கடந்த ஏழு மாதங்களாக அந்த 18 வயது இளைஞா் பயன்படுத்தி வந்துள்ளாா். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளாா்.

இதுகுறித்து வேலூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்று சிகிச்சையில் இருந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்த லாரி ஓட்டுநா் ரஞ்சித்குமாரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 22 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.