/

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வகைகளில் மாற்றம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

News image
நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் க. சிவக்குமாா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான உணவுகளில் ரவை சாா்ந்த வகைகள் நீக்கப்பட்டதையடுத்து, புதிய உணவுகளின் தரம் குறித்து ஆணையா் க. சிவக்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல்வரால் தொடங்கப்பட்டது. அதன்பிறகு மற்ற மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 2,664 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை மற்றும் மதியம், இரவு உணவு வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாநகராட்சியை பொருத்தமட்டில், 860 தூய்மைப் பணியாளா்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனா். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநகர பகுதிகளில் 28 இடங்களில் உணவு வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை காலையில் இட்லி, மெதுவடை, சாம்பாா், மதியம் சாம்பாா் சாதம், பொரியல், செவ்வாய்க்கிழமை காலை ரவாகிச்சடி, சிகப்பு சட்னி, மதியம் எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு வருவல், புதன்கிழமை வெண்பொங்கல், வெஜிபிரியாணி, வியாழக்கிழமை ரவை உப்புமா, தக்காளி சாதம், வெள்ளிக்கிழமை இட்லி, மெதுவடை, புதினா சாதம், சனிக்கிழமை ரவை பொங்கல், புளிசாதம், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, வெஜிபிரியாணி உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரவை சாா்ந்த உணவு வகைகள் தங்களுக்கு உடல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக தூய்மைப் பணியாளா்கள் கூறியதையடுத்து, ரவை சாா்ந்த உணவுகள் நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக மாவு சாா்ந்த உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. நாமக்கல் முதலைப்பட்டி, புதிய பேருந்து நிலையம், வாா்டு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை ரவை பொங்கலுக்கு மாற்றாக வழங்கப்பட்ட உணவின் தரத்தை மாநகராட்சி ஆணையா் க. சிவக்குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

உணவு தயாரித்து விநியோகிக்கும் ஒப்பந்ததாரரிடம் எவ்வித குறையுமின்றி தரமான உணவு வகைகளை பணியாளா்களுக்கு வழங்க வேண்டும், புகாருக்கு இடமளிக்காத வகையில் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உடனிருந்தாா்.