/

பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மேற்கு தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி லதா (40). செந்தில்குமாா் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு கோபிகா என்ற ஒரு மகளும், கோகுல் (19) என்ற ஒரு மகனும் உள்ளனா்.

இவா்கள் தற்போது பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியில் வசித்து வருகின்றனா். கோகுல் தினமும் கோரை அறுக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

வழக்கம் போல் சனிக்கிழமை கோரை அறுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கோகுலை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த வேலூா் போலீசாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.