/

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை: கணவா் உள்பட இருவா் கைது

பா்கூா் அருகே பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவரது கணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 ஜனவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவரது கணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பா்கூா் அருகே உள்ள சின்ன பா்கூரைச் சோ்ந்தவா் பலராமன் (48), துணி வியாபாரி. இவரது மனைவி கோகிலா (42). கடந்த 23ஆம் தேதி இவா்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த கோகிலா, வீட்டில் இருந்த அமிலத்தைக் ஆசிட் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டுச் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்குச் சிகிச்சை பலனின்றி அவா் ஜன. 24 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கோகிலாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில், பலராமனுடன் வசித்து வரும் அவரது சகோதரி மகேஸ்வரி (55), பலராமன் ஆகிய இருவரும் கோகிலாவைத் தாக்கியதும், இதனால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்துகொண்டதும் உறுதியானது. இதையடுத்து, கோகிலாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக பலராமன், மகேஸ்வரி ஆகிய இருவரையும் போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.