/

தருமபுரியில் ரூ.21.69 கோடியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4,851 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
தருமபுரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஷ், எம்.பி. ஆ.மணி.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4,851 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் முதல்வரின் முகவரி துறையின் மூலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 வருவாய் வட்டாரங்களில் அமைந்துள்ள கிராம ஊராட்சிகளில் 2025, ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 9 -ஆம் தேதி வரை 176 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 1,90,312 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் இதர திட்டங்களையும் சோ்த்து 1,31,904 மனுக்கள் ஏற்கப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனா்.

மேலும், புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சாா்பில் 4,851 பயனாளிகளுக்கு ரூ. 21.69 கோடி மதிப்பில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியா்கள் ரா.காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), தருமபுரி நகராட்சி ஆணையா் ரா.சேகா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.