தருமபுரி மாவட்டத்தின் 3 மலைக் கிராமங்களில் தலா ரூ. 11 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மின்சார அமைப்புடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர் தொட்டிகளை மாவட்ட வனத்துறை அமைத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட மலைக்கிராமங்கள் கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகியன. நீண்ட தொலைவு நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையுள்ள இந்த மலைக் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து "தினமணி'யில் கடந்த டிசம்பரில் செய்தி வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, இம்மூன்று மலைக் கிராமங்களிலும் வனத்துறை சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இம்மூன்று இடங்களிலும் சூரியஒளி மின் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மலைக் கிராமங்கள் என்பதால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க இயலாது. ஏற்கெனவே இப்பகுதியில் குடிநீர் எடுக்கும் கிணறுகளில் இருந்து தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இம்மூன்று அமைப்புகளும் வனப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து வசதியில்லாத மலைப் பகுதிகள் என்பதால், தொட்டி அமைப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் சூரியஒளி மின் தகடுகள், மோட்டார்களை மலைமேல் ஏற்றிச் செல்வதற்காக கழுதைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.