/

நாமக்கல்லில் சர்வதேசத் தரத்திலான நூலகத்துடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்

நாமக்கல்: கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் கைவிரல் எண்ணிக்கையில் அடங

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:49 pm

என். தமிழ்ச்செல்வன்

நாமக்கல்: கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் கைவிரல் எண்ணிக்கையில் அடங்குவர். கல்வியில் சிறந்த இம்மாவட்டத்தை சிவில் சர்வீஸஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக்கிட சர்வதேச தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் உதயமாகியுள்ளது.

பொதுநூலகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மோகனூர் சாலை பெரியபட்டியில் (பழைய நீதிமன்ற வளாகம்) அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நூலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு மையம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட தமிழக அரசால் அரசாணை வழங்கப்பட்டு மூன்றாம் நிலை நூலகர் பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாணையுடன் கூடிய ஒரு போட்டித்தேர்வு மையம் அமைவது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும்.



அங்குள்ள நிலத்தில் ரூ.47.55 லட்சம் மதிப்பில் இருதளங்களில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில், சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்க டிஜிட்டல் ஸ்கிரீனுடன் கூடிய அறை அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 120 பேர் வரை அமர்ந்து பயிற்சி பெற முடியும். தவிர, சிவில் சர்வீஸஸ், யூபிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராக தேவையான உயர்தரமான புத்தகங்கள் அடங்கிய நூலக அறை மற்றும் ஆண், பெண்கள் அமர்ந்து படிக்க வசதியாக சிறப்பு வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.



இந்நூலகமும், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து சிறந்த முறையில் செயலாற்றிட மாவட்ட த்திலுள்ள முக்கியத் தொழிலதிபர்களை இணைத்து தனியாக லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. வாரந்தோறும் சிறந்த பயிற்சியாளர் களை அழைத்து வந்து பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சிக்குத் தேவையான செலவுகள் அனைத்தும் இந்த அறக்கட்டளை ஏற்க உள்ளது.



சர்வதேச தரத்திலான பயிற்சிகள், நூல்களை தொடர்ந்து வழங்கிட சிவில் சர்வீ ஸஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வு களுக்காக சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தவிர, போட்டித்தேர்வுகளுக்கு தேவையான சர்வதேசதர நூல்களை டிஜிட்டல் முறை யில் பெற்றிட தில்லி வாஜிராம் அன்ட் ரவி ஐஏஎஸ் அகாதெமியுடனும் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அருகிலுள்ள அரசு தங்கும் விடுதிகளில் இலவசமாக தங்கி பயிற்சி பெறுவதற் கான ஏற்பாடுகளையும் பொதுநூலகத்துறை செய்து வருகிறது.



இத்தகைய சிறப்புகளுக்குரிய இந்நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையம் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் கூறியது:



தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி கள் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அங்கு போதிய வசதிகளும், புத்தகங்களும் இருப்பதில்லை. தவிர, தனியார் பயிற்சி மையங்களை அணுகி பயிற்சி பெறவும் அனைத்துத்தரப்பு மாணவர்களால் இயல்வதில்லை.



இவற்றைக் கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கு என்றே சிறப்பு நூலகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நூலகத்தில் சிவில் சர்வீஸஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தேவையான நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்கள், இதர ஆலோசனைகளை மனித நேய அறக்கட்டளை மூலம் பெறப்பட உள்ளது. அதிகப்படியான மாணவர்கள் பயிற்சி பெற பதிவு செய்யும்பட்சத்தில் லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலேயே பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



அதன்படி, இந்த நூலகமும், பயிற்சி மையமும் தங்குதடையின்றி செயல்பட்டு மாணவர்களுக்கு சிறந்த பலனை அளித்திட அனைத்து வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தை நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.



ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைவதில் மாவட்ட நூலகரின் பங்கு

சர்வதேச தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் அமைவதில் மாவட்ட நூலக அலுவலர் எஸ்.ஜெகதீஸ் பெறும் பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே, அவரது முயற்சியில் தர்மபுரியில் அமைந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அரசாணையுடன் கூடியதாக இல்லாததால் காலப்போக்கில் மாணவர்களுக்கு உரிய பலனை தருவாக இல்லை.



இதைக்கருத்தில் கொண்டு நாமக்கல்லில் அமைந்துள்ள இந்த நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையத்து க்கு அரசாணையும், நிரந்தர அலுவலர் பணியிடமும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்தரமாக இங்கு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்திட தொழிலதிபர்களை இணைத்து அறக்கட்டளையும், அந்த அறக்கட்டளைக்கு சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயிற்சி மையம் தொடர்ந்து சிறந்த பலனை அளிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



பெரும்பாலான நூலகர்கள் தங்களது பணிகளை மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கும் வேளையில் நாமக்கல்லில் இந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைய மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்ட நூலகர்களும் முயற்சி மேற்கொண்டால் அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை அமையும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.