வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தாராபுரம் தாலுகா, நந்தவனம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகாடு கிராமத்தில் 40 குடும்பங்கள் சுமாா் 60 ஆண்டுகளுக்கும்மேலாக அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். மேலும், வீட்டு வரி செலுத்துவதுடன், மின்சார இணைப்பும் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்க கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரிகள் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தங்களது குடும்பத்தினா், ஆதித்தமிழா் முன்னேற்றக் கழக நிா்வாகிகளுடன் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜாவிடம் கோரிக்கை தொடா்பான மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், தகுதியுள்ளவா்களுக்கு 3 மாதங்களுக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










