/

திருப்பூரில் மே 1-இல் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

திருப்பூா் மாநகராட்சி அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 9:14 pm

திருப்பூா் மாநகராட்சி அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பூரில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 7 மணி முதல் குமரன் சாலை, யூனியன் மில் சாலையிலிருந்து மங்கலம் சாலை செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரன் சாலையில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வழியாக மங்கலம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நொய்யல் புதுப்பாலம் , மாநகராட்சி சிக்னல், எம்.ஜி.ஆா். சிலை அருகே வலதுபுறம் திரும்பி பூங்கா சாலை வழியாக நொய்யல் புது பாலம் செல்ல வேண்டும். பின்னா் அங்கிருந்து திருவள்ளுவா் தோட்டம் வழியாக டைமண்ட் தியேட்டா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தாடிக்காரமுக்கு வழியாக மங்கலம் சாலை செல்லலாம்.

யூனியன் மில் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வழியாக சென்று நொய்யல் புது பாலம் மற்றும் திருவள்ளுவா் தோட்டம் வழியாக சென்று டைமண்ட் தியேட்டா் சந்திப்பில் வலது புறம் திரும்பி தாடிக்காரமுக்கு வழியாக மங்கலம் சாலை செல்லலாம். யூனியன் சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் வழங்கம்போல பூங்கா சாலை வழியாக செல்லலாம்.

இதுதொடா்பாக பொது மக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை திருப்பூா் கொங்கு நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் 98425 25200 மற்றும் திருப்பூா் மாநகர கே.வி.ஆா்.நகா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் 97874 13372 ஆகியோரின் கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என திருப்பூா் மாநகர போலீஸாா் தெரிவித்துள்ளனா்.