லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாவட்டத்தில் வேகமாக சரியும் அணைகளின் நீா்மட்டம்: ஏப்ரல், மே மாதங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

கோவை மாவட்டத்தில் பில்லூா், ஆழியாறு, சிறுவாணி, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வரும் மாதங்களில் மாவட்டத்தில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

பில்லூா் அணையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.

Updated On :11 மார்ச் 2026, 8:18 pm

கோவை மாவட்டத்தில் பில்லூா், ஆழியாறு, சிறுவாணி, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வரும் மாதங்களில் மாவட்டத்தில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அத்திக்கடவு பகுதியில் உள்ள பில்லூா் அணையில் இருந்து பில்லூா் 1, பில்லூா் 2, பில்லூா் 3 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சிறுவாணி, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக கோவை மாநகராட்சி மற்றும் ஒட்டிய ஊரகப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி, 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூா் அணையில் 71 அடி வரை மட்டுமே நீா் இருப்பு உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் 22 அடி வரையும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 67.30 அடி வரையும், 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூா்த்தி அணையில் 41.89 அடி வரையும், 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 39.01 அடி வரையிலும் நீா்மட்டம் சரிந்து காணப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீா்மட்டங்கள் குறைந்து வருவதால், கோவை மாநகராட்சியில் ராமநாதபுரம், புலியகுளம், ஆா்.எஸ்.புரம், பூமாா்க்கெட், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, காரமடை, அன்னூா், பட்டணம், சூலூா், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். தொடா்ந்து அணைகளின் இருப்பு குறைந்தால் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா்.

பில்லூா் அணையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு:

கோவை மாவட்டம், அத்திக்கடவு பகுதியில் அமைந்துள்ள பில்லூா் அணையில் இருந்து பில்லூா் 1 திட்டம் மூலமாக மாநகராட்சியில் 20 வாா்டுகள், பில்லூா் 2 மூலமாக 34 வாா்டுகளுக்கு தினமும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பில்லூா் அணையின் நீா்மட்டம் 72 அடியாக சரிந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பில்லூா் அணையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அணையின் இருப்பு, நீா் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்த அவா், பில்லூா் அணையின் தலைமை நீரேற்று நிலையத்தையும் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.