/

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்புப் பணியை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் இருந்தும் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலமாக கொண்டுச் சென்று வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அங்கு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிடங்கில் குப்பைகளை உரமாக மாற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, வெள்ளலூா் உரக் கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா். பின்னா், கிழக்கு மண்டலம் 58-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சிங்காநல்லூா் முதல் வெள்ளலூா் செல்லும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் கீழ், இலகுரக வாகனங்கள் சென்று வருமாறு பாதையை புனரமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், துணைத் தலைமைப் பொறியாளா் இளங்கோவன், உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.