அழிவின் விளிம்பில் பாம்பு இனங்கள்
இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் பாம்பு இனங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் பாம்பு இனங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் காணப்பட்டாலும் இந்தியாவில் மட்டும் 283 பாம்பு இனங்கள் உள்ளன. இதில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், கருந்தலைப்பாம்பு உள்ளிட்ட பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவையாகும்.
இந்த பாம்புகள் எலி, பறவைகள், சிறு பூச்சிகள் உள்ளிட்டவற்றை உணவாக உட்கொள்கின்றன. இந் நிலையில், காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், அதன் வாழ்விடங்கள் சுருங்கி வனத்தை ஒட்டிய கிராமங்கள், நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கின்றன.
வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி உரிய அனுமதியின்றி மற்றும் உரிமம் இல்லாமல் பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் இருந்தும் பாம்புகள் கொல்லப்பட்டு வருகின்றன. பாம்புகள் விஷத்துக்காகவும், இறைச்சிக்காகவும் கொல்லப்படுகின்றன.
நாகப் பாம்பு கட்டு விரியனின் விஷம் ரூ. 30 ஆயிரம் வரைக்கும், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்பின் விஷம் ரூ.40 முதல் 50 ஆயிரம் வரைக்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யபடுவதாக கூறப்படுகிறது. பொதுவாக பாம்புகள் அதன்முழு ஆயுள் காலம் வரைக்கும் வாழும் தன்மை கொண்டது.பாம்பின் விஷத்திலிருந்து விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. கிண்டி, காஞ்சிபுரம் பாம்புப் பண்ணைகளில் மட்டும் விஷம் எடுக்கப்படுகிறது.
சாரைப் பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சைப் பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவளப் பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்ட வகைகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்திய அளவில் அதிக அளவு விஷம் கொண்டவை ராஜ நாகமாகும். சுமார் 25 அடி நீளமுள்ள இந்தப் பாம்புகள் பெரும்பாலும், அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவில் இப்பாம்புகள் காணப்படுகின்றன. இதன் விஷம் ஒரே சமயத்தில் 5 யானைகளை கொல்லக்கூடியது.
அழிந்து வரும் நிலையில் உள்ள பாம்புகளை பாதுகாக்க பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கோவை வ.உ.சி.விலங்கியல் பூங்காவின் முன்னாள் இயக்குநர் கே.அசோகன் கூறுகையில்,சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு உள்ளிட்டவற்றால் உலக அளவில் 14 வகையான பாம்பு இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அழிந்து வரும் பாம்புகளைப் பாதுகாக்க அரசு சார்பில் மாவட்டம் தோறும் குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோவையைச் சேர்ந்த பாம்பு பாதுகாவலர் அமீன் கூறுகையில், "பாம்புகளை பயத்தின் காரணமாக பெரும்பாலும் கொன்றுவிடுகின்றனர். மேலும், வனப்பகுதிகள் அழிந்து வருவாதல் பாம்புகள் நகர்ப்புறங்களை நோக்கி வருகின்றன.
பாம்புகளை பார்த்தால் உடனடியாக வனத்துறையினர் அல்லது பாம்பு பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...