/

மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்புகள் தானம்

News image
ஆா்.ரவிசந்திரன்.
Updated On :25 ஜனவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவா் மூளைச்சாவு அடைந்ததையடுத்து, உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் 12 போ் மறுவாழ்வு பெற்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த பொம்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.மதன்குமாா் (25). இவா் அரூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தாா். அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் மிகவும் மோசமடைந்து, கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அறுவைச் சிகிச்சை மூலமாக அவரது உறுப்புகள் அகற்றப்பட்டன. இதில் இதயம் நீலாம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரு கண்கள் பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் உரிய பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் 7 போ் மறுவாழ்வு பெற்றனா்.

எஸ்.மதன்குமாா்

எஸ்.மதன்குமாா்

5 பேருக்கு மறுவாழ்வு அளித்த முதியவா்:

திருப்பூா் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.ரவிசந்திரன் (60). இவா் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து, கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். அவரது குடும்ப உறுப்பினா்களின் ஒப்புதலுடன் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

பின்னா் தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.