வாய்ப்புக்கு ஏங்கும் பழங்குடியினக் குழந்தைகள்
ஈரோடு, ஜூன் 24: வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால், மலைக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். ஈரோடு மாவட்ட


ஈரோடு, ஜூன் 24: வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால், மலைக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரையிலிருந்து மேற்கு மலை என அழைக்கப்படும் பகுதியில் ஒன்னகரை, ஆலனை, ஆலசொப்னட்டி, கொங்காடை காலனி, பெரியூர், சுண்டைப்போடு, கோயில்நத்தம், அக்னிபாவி உள்ளிட்ட 10 சிறு கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் தாமரைக்கரைக்கு சென்றுவர செங்குத்தான மலை மீதுள்ள ஒத்தையடிப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும்.
இக்கிராமங்களில் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 439 பேர் பள்ளிக்குச் செல்லாமல், சமவெளிப் பகுதியில் உள்ள விவசாயப் பண்ணைகள், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிலகங்கள், கரும்புவெட்டும் பணி, குடும்பத்தினருடன் வனப்பொருள் சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக தன்னார்வ அமைப்பு ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததே இக் கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமங்களில் இருந்து 3 முதல் 5 கி.மீ. தூரத்தில் மலைப் பகுதிகளிலேயே பள்ளிகள் உள்ளன. வசிப்பிடத்திலிருந்து பள்ளி செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதி. இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் கருதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர்.
÷கல்வி வாய்ப்பு இல்லாமல் வளரும் இக் குழந்தைகள், 8 வயதை அடைந்தவுடன் பண்ணையாட்களாகவும், தொழிலாளர்களாவும் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
÷இது குறித்து பழங்குடி மக்கள் சங்க தலைவர் பிவி.பாலதண்டாயுதம் கூறியது:
÷பர்கூர் மலைப்பகுதியில் கல்வி வாய்ப்பு கிடைக்காமல் குழந்தைத் தொழிலாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றனர். இக்கிராமங்களில் உள்ள குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவதன் மூலம், இந்த நிலையை படிப்படியாக மாற்றிவிடமுடியும்.
÷இக் கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை அமைத்தால், இங்கு பணியாற்ற அந்த கிராமங்களில் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளவர்கள் தயாராக உள்ளனர். வாழ்விடத்திலேயே பள்ளிகள் அமைந்தால் இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும்.
÷தாமரைக்கரை மேற்கு மலைப் பகுதியில் தகுதியான கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர் திட்ட பள்ளிகளை அமைத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
÷இது குறித்து குழந்தைத் தொழிலாளர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சண்முகத்திடம் கேட்டபோது, கடந்த ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 8 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பர்கூர் வனப் பகுதியில் உள்ள 8 இடங்களில் நடப்பாண்டில் பள்ளிகள் தொடங்க, தன்னார்வ அமைப்பு ஒன்று அனுமதி கேட்டுள்ளது. இந்த கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
÷அனைவருக்கும் கல்வி, 14 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி போன்ற திட்டங்கள் யாவும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களால் பலரது பிடியில் சிக்கி வாழ்க்கையை படிப்படியாக தொலைத்துக் கொண்டிருக்கும் மலை கிராம மக்கள், தவறான வழியை தேர்ந்தெடுக்காமல் தடுப்பதற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி.
÷விலங்குகளின் மொழிகளை அறிந்துள்ள இவர்கள், நாம் பேசும் மொழிகளையும் அறிந்துகொள்ள விரும்புகின்றனர், இதற்காக சில விதிமுறைகளையும் விலக்கி வைக்க ஆட்சியாளர்கள் தயங்கக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...