70 லட்சத்தை எட்டுகிறது வேலைவாய்ப்பு பதிவு
ஈரோடு, ஆக. 23: தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரசுப் பணியில் சேர ஆர்வம் குறைந்த அளவில் இருந்த அரசுப் பணியாளர


ஈரோடு, ஆக. 23: தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அரசுப் பணியில் சேர ஆர்வம்
குறைந்த அளவில் இருந்த அரசுப் பணியாளர்களின் மாத ஊதியம், 6-வது ஊதியக்குழு பரிந்துரைக்குப் பிறகு பல மடங்கு அதிகரித்தது. இதனால் பொறியியல் பட்டம் முடித்து தனியார் துறைகளில் பணியாற்றியவர்கள்கூட அரசுப் பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளை எழுதி அரசுப் பணியில் சேர முயற்சிக்கின்றனர். அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமே | 10 ஆயிரமாக இருப்பதால், இளநிலை உதவியாளர் பணிக்குகூட தற்போது கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
பதிவு எண்ணிக்கை உயர்வு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்கள், தங்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியை முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். அரசு வேலைக்கான முன்னுரிமையைப் பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் உள்ளது.
இதனால் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நுட்ப பதிவு அலுவலகம், தொழில் திறனற்றோருக்கான பதிவு அலுவலகம், மாற்றுத்திறன் படைத்தோர் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் என 5 அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 5,92,397 பேர் பதிவு செய்துள்ளனர்.
70 லட்சத்தைத் தொடும்
கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5,49,564, திருவள்ளூர் 1,73,215, காஞ்சிபுரம் 2,06,779, திருவண்ணாமலை 2,08,217, வேலூர் 2,86,069, தஞ்சாவூர் 1,97,938, கரூர் 88,417, புதுக்கோட்டை 1,47,092, பெரம்பலூர் 69,615, அரியலூர் 78,225, திருவாரூர் 1,97,938, நாகப்பட்டினம் 1,69,341, கடலூர் 2,22,514, விழுப்புரம் 2,63,466, கோவை 1,88,522, நீலகிரி 85,637, திருப்பூர் 30,055, ஈரோடு 1,23,879, நாமக்கல் 1,61,076, சேலம் 2,48,166, தருமபுரி 1,48,290, கிருஷ்ணகிரி 1,35,811, திண்டுக்கல் 1,10,636, சிவகங்கை 1,22,306, ராமநாதபுரம் 1,29,206, விருதுநகர் 1,55,472, தூத்துக்குடி 1,70,769, திருநெல்வேலி 2,43,434, நாகர்கோவில் 2,57,679 பேர் என மொத்தம் 61,45,483 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 70 லட்சத்தைத் தொட்டு விட வாய்ப்புள்ளது.
தனியார் வேலை மீது வெறுப்பு
பணிச் சுமையால் ஏற்படும் மனரீதியான பிரச்னைகளே தனியார் துறையில் பணியாற்றுபவர்களை அரசு வேலையின் பக்கம் கவனத்தைத் திருப்புகிறது. 25 வயதில் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேருபவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகளில் மன நிம்மதி இழந்துவிடுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், தனியார் துறையில் கூடுதல் ஊதியம் கிடைத்தாலும், குறைந்த ஊதியத்தில் தாற்காலிகப் பணியாக இருந்தாலும்கூட அரசுப் பணியில் சேர இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...