காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கிடைக்குமா அனுமதி?
கோவை, ஆக. 11: ஏழை மாணவ மாணவிகளின் பசியை போக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதிக்காக 4 மாதங்களாக கோவை மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது. சென்னைக்கு அடுத்து பெரிய அளவில்


கோவை, ஆக. 11: ஏழை மாணவ மாணவிகளின் பசியை போக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதிக்காக 4 மாதங்களாக கோவை மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது.
சென்னைக்கு அடுத்து பெரிய அளவில் கோவை மாநகராட்சி வளர்ந்து வருகிறது. தொழில் வளம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை நகரில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர வேண்டுமெனில் ஆயிரக்கணக்கில் செலவாகும். இதனால் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.
÷இந்நிலையில் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் மாநகராட்சிப் பள்ளிகள் குறித்து கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பதும், அவர்கள் காலை நேரங்களில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதும் தெரியவந்தது.
÷ஏழ்மை காரணமாகவும், தந்தை, தாய் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதாலும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
÷இதைத் தொடர்ந்து 2010-11 ஆம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும், ஜூன் முதல் இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
÷இத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசுக்கு, மாநகராட்சி நிர்வாகம் 4 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகளின் பசியைப் போக்கும் இத் திட்டத்துக்கு அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
÷"மாநகராட்சியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால் உடல் சோர்வடைந்து படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் காலை வழிபாடு நடைபெறும்போது சில குழந்தைகள் மயங்கி விழுந்துவிடுகின்றனர் என்றும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
÷அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகள் செய்திருந்த பரிந்துரையில் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு காலை நேரத்தில் கம்பு, கேழ்வரகு கூழ், கொண்டைக் கடலை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தனர். அவற்றை விநியோகம் செய்வது சற்று சிரமம் என்பதால் சத்தான காய்கறிகளுடன் கூடிய உணவு, இட்லி, உப்புமா போன்ற உணவுகளை தரமான உணவு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி வரவில்லை. ஏழை மாணவ, மாணவிகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த இத் திட்டம் நிச்சயம் பயன்படும் என்கிறார் மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்.
÷"மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சத்தான உணவு வழங்கும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவ, மாணவிகளின் பசியை போக்கி கல்விக் கண்ணைத் திறக்கும் இத் திட்டத்துக்கு அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும். பிற அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஏற்கெனவே கோவை மாநகராட்சியில் பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இத் திட்டமும் அமையும்' என்கிறார் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...