உதகை பேரிடர் மீட்பில் அதிரடிப்படை!
உதகை,நவ. 11 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஆனால் தமிழக அதிரடிப்படையினருக்கோ கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சாதனைகள்தான். அதனால்தான் கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 10


உதகை,நவ. 11 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஆனால் தமிழக அதிரடிப்படையினருக்கோ கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் சாதனைகள்தான்.
அதனால்தான் கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த இரு உடல்களை மீட்டதோடு, மலையடிவாரத்திலிருந்து அந்த உடல்களை தூக்கி செல்வதற்கு சாக்குப்பைகளாலான ஸ்டிரெச்சரை தாங்களே உருவாக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர், வீரப்பனுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக அதரடிப்படையினர் வனப்பகுதிகள் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வனப்பகுதிகளில் தொடர்ந்து பயிற்சி முகாம்களையும், வனப்பாதுகாப்பையும், பேரிடர் மேலாண்மை திட்டத்தையும் தங்கள் முக்கிய பணியாக்கிக் கொண்டனர்.
அதிரடிப்படையினரின் இந்த பணிகளின்போது வனப்பகுதிகளில் வனக்கொள்ளையர்கள் எவரேனும் புகுந்துள்ளனரா என்பதை தேடுவதோடு, வனத்துறையினருக்கு தேவையான பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.
முதல் பேரிடர் மீட்பு சம்பவம்: இந்நிலையில், அதிரடிப்படையினரின் முதல் பேரிடர் மீட்பு சம்பவமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் அதிரடிப்படை எஸ்பி கருப்புசாமி தலைமையில் 67 பேர் கொண்ட குழு நீலகிரிக்கு வந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் இக்குழுவினர் சத்தியமங்கலத்திலிருந்து கோத்தகிரிக்கு வந்தனர். வரும் வழியில் சாலைகளிலிருந்த மண் சரிவுகளையும், பாறைகளையும் அகற்றி போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இதற்கிடையே கொணவக்கரை ஆதிவாசி கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவால் அங்கிருந்த ஒரு வீடு இடிந்து விழுந்து அந்த வீட்டிலிருந்து ஒரு பெண் மண்ணுக்குள் புதையுண்டு விட்டதாக இவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சாலைகளில் இருந்த மண் சரிவுகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது இவர்களை ராணுவத்தினர் என நினைத்த அப்பகுதி மக்கள் இத்தகவலை அவர்களிடமே தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், இடிபாடுகள் சுமார் 100 அடி ஆழத்தில் புதைந்து விட்டதாலும் மிகுந்த சிரமத்திற்கிடையே தங்கள் பணியை தொடங்கினர். உதகைக்கு வரவழைக்கப்பட்டிருந்த அதிரடிப்படையை சேர்ந்த அனைவருமே குழுவாக இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பின்னர் ஒரு உடலின் தலை தென்பட்டது.
இதையடுத்து மிகுந்த கவனத்துடன் அந்த உடலை வெளியே எடுத்த போதுதான் அது ஒரு ஆணின் உடல் என்பது தெரியவந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர் பெண் என கூறப்பட்டதால் மீண்டும் தங்கள் பணியை தொடங்கினர். அப்போது அந்த ஆணின் உடலுக்கு அடியில் சிக்கியிருந்த பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. ஊர்மக்களின் உதவியுடன் அந்த பெண்ணின் பெயர் அன்னக்கிளி(42) என்பது தெரியவந்தது. ஆனால் அந்த ஆணின் தகவல் தெரியவில்லை.
இதையடுத்து அதிரடிப்படையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த ஸ்டிரெச்சரில் அந்த ஆணின் உடலை எடுத்து வைத்தனர். ஆனால் அந்த பெண்ணின் உடலை தூக்கிச் செல்ல ஸ்டிரெச்சர் இல்லாததால் காலியாக கிடந்த சிமெண்ட் சாக்குப்பைகளைக் கொண்டு, பக்கவாட்டில் இரு மரக்கிளைகளை வைத்து தாங்களாகவே ஒரு ஸ்டிரெச்சரையும் தயார் செய்து அந்த உடலையும் மலையடிவாரத்ததிலிருந்து முக்கிய சாலைக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை மட்டும்தான் அதிரடிப்படையினரின் பணி என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் புதையுண்ட இரு உடல்களை மிகக் குறைந்த நேரத்திலேயே மீட்ட அதிரடிப்படையினரின் பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. இத்தகைய பணியை அதிரடிப்படையினர் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...