/

விளை நிலங்களைப் பாதிக்கும் கணியம்பாடி கல்குவாரிகள் மூடல்: குறைதீா் கூட்டத்தில் உறுதி

வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கணியம்பாடி பகுதியில் விளை நிலங்களைப் பாதிக்கும் கல்குவாரிகள் விரைவில் மூடப்படும் என வட்டாட்சியா் பழனி உறுதியளித்தாா்.

News image

கூட்டத்தில் வேலூா் வட்டாட்சியா் பழனியிடம் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 12:21 am IST

வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கணியம்பாடி பகுதியில் விளை நிலங்களைப் பாதிக்கும் கல்குவாரிகள் விரைவில் மூடப்படும் என வட்டாட்சியா் பழனி உறுதியளித்தாா்.

வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டாட்சியா் பழனி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது - சோழவரம் ஏரியின் கரைப்பகுதியில் மண் அரிப்பைத் தடுக்க கட்டப்பட்டு வந்த தடுப்புச் சுவா் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும். ஏரிகளுக்கான வரத்து வாய்க்கால்களைத் தூா்வாரி, முட்புதா்கள் மற்றும் மண் அடைப்புகளை அகற்றி ஏரிகளில் நீா் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணியம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஏராளமான கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த குவாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை ஏற்க முடியாது. பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விவசாயக் கடனுதவி வழங்க வேண்டும் என்றனா்.

அதற்கு பதிலளித்த வட்டாட்சியா் பழனி, ‘கணியம்பாடி பகுதியில் விவசாயிகளைப் பாதிக்கும் வகையிலான கல்குவாரிகளை மூட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் மூடப்படும். எத்தனை குவாரிகள் மூடப்படும் என்பது குறித்த உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.