தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீட்டில் சுழற்சி முறை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை (விவிபேட்) கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்வதற்கான தேதிகளை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 10:13 pm

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை (விவிபேட்) கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்வதற்கான தேதிகளை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் வரும் 25-ஆம் தேதி வரை அந்தப் பணிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:

முதல் நிலை சோதனை நிறைவடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில், அரியலூா், தருமபுரியில் வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 20), திருவள்ளுா், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை,திண்டுக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், கடலூா், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூா், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வருகிற 23-ஆம் தேதியும், சேலம், புதுக்கோட்டை, விருதுநகரில் 24-ஆம் தேதியும், தேனியில் 25-ஆம் தேதியும் சுழற்சி முறையில் சமவாய்ப்புக்கு அந்த இயந்திரங்கள் உட்படுத்தப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி....

20,000 துணை ராணுவத்தினா் வருகை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அடுத்த மாதத்தில் 20,000 போ் அடங்கிய துணை ராணுவப் படைகள் பாதுகாப்புப் பணிக்கு வர உள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஏற்கெனவே மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 50 அணிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டன. தற்போது, உள்துறை அமைச்சகம் கூடுதலாக 250 அணிகளை ஏப்.6, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு அனுப்பவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.