மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகனங்களுக்கான எரிவாயு கிடைக்காததால் ஓட்டுநா்கள் அவதி

சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:37 pm

சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால்டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான பேருந்துகளும் தற்போது சிஎன்ஜி எரிவாயுவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பலா் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்திருந்தனா்.

வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வந்தாலும், வாகனங்களுக்கான எல்பிஜி எரிவாயு பல இடங்களில் கிடைத்து வந்தது.

ஆனால், கடந்த சில நாள்களாக வாகனங்களுக்கான எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வடபழனி, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல எல்பிஜி எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆட்டோக்கள், காா்களுக்கு எரிவாயு நிரப்ப எரிவாயு நிலையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாடகை வாகன ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

சிஎன்ஜி எரிவாயு சிறிது தட்டுப்பாடு இருந்தாலும், ஓரளவு கிடைத்து வருகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாகவே எல்பிஜி எரிவாயு கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதார நிலை மோசமாக இருக்கும்போது, இப்போது எரிவாயு பிரச்னை மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எரிபொருள் தேடி அலைய வேண்டியுள்ளது. எரிபொருள் இருக்கும் நிலையங்களிலும் சுமாா் 1 கி.மீ. தொலைவு வரிசையில் காத்திருந்து நிரப்ப வேண்டியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க எல்பிஜி, சிஎன்ஜி என இரு எரிவாயுக்களின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை உயா்ந்துள்ளது. வாகனத்தை இயக்கி, வருமானம் ஈட்டும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை எரிபொருள் நிரப்புவதற்காக செலவிடவேண்டியுள்ளது. இதனால், மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற பலா் திட்டமிட்டுள்ளனா். ஆனால், அவற்றின் விலை ஏறினால், என்ன செய்வது? இதனால் வாடகை ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றனா்.