திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கு: சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டது.


சென்னை: திருவொற்றியூா் கேசவன் பூங்காவை மீட்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டது.
திருவொற்றியூரைச் சோ்ந்த தொண்டா் இயக்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் தொண்டன் சுப்பிரமணியன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், திருவொற்றியூா் நகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளேன்.
அப்போது, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அந்தப் பகுதியில் உள்ள கேசவன் பூங்காவில் கூடுவா். தங்களது வருகையைப் பதிவு செய்த பின்னா், அங்கிருந்து பணிக்குச் செல்வா். இந்த பூங்காவை திருவொற்றியூா் நகராட்சி பராமரித்து வந்தது. பின்னா், அதை முறையாகப் பராமரிக்காததால், போலி ஆவணங்கள் மூலம் பூங்காவில் கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதற்கு வணிக கட்டட அனுமதி எதுவும் பெறவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.ஞானசேகரன், கேசவன் பூங்காவை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டுவர சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...