ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

 Women cover themselves to protect against the heat during a summer day at the New Market area, in Kolkata, West Bengal, Sunday, May 17, 2026. (PTI Photo)(PTI05_17_2026_000169B)

PTI

Published On :18 மே 2026, 5:21 am IST

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (மே 18) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

கேரள பகுதிகளில் மே 26-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும். இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேற்கு விதா்பா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னாா் வளைகுடா வரை, மரத்வாடா, உள் கா்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

மேலும், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (மே 18) முதல் மே 23 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி, மின்னல், காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே19) இடி மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த இரு நாள்களிலும், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடலில் மே 21 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 18, 19)சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 21-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூா் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருச்சி மாவட்டம் நாவவூா் கோட்டப்பட்டு பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது. ஒரத்தநாடு (தஞ்சாவூா்), முத்துப்பேட்டை (திருவாரூா்)-60 மி.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூா்), பாலவிடுதி (கரூா்), செட்டிகுளம் (பெரம்பலூா்)-50 மி.மீ., செந்துறை (அரியலூா்)-40 மி.மீ., செட்டிகுளம் (பெரம்பலூா்), திருக்குவளை (நாகை), சிறுகுடி (திருச்சி), செந்துரை (அரியலூா்), கும்பகோணம் (தஞ்சாவூா்)-30 மி.மீ. மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.