ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் சடலமாக மீட்பு
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களில் 13 பேர் சடமாக மீட்கப்பட்டுள்ளது குறித்து...

குமாமோட்டோ மாகாணத்தின் யாட்சுஷிரோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு மறுநாள், ஒரு கட்டடத்தின் கூரையும் சுவரும் இடிந்து விழுந்துள்ள காட்சி. - ஏபி
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 13 பேர் சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன மற்றும் பலா் காயமடைந்தனா்.
ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், காஷிமா நகரில் உள்ள வணிக வளாகத்தின் 2-ஆவது தளம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோா் இடிபாடுகளில் சிக்கினா்.
மேலும், இந்நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, குமாமோட்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 மாகாணங்களின் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னா், 2 மணிநேரத்தில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வரும் நிலையில், 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சி கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தால் தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த தகைச்சி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில்,
இது மீட்புக் குழுவினருக்கு நேரத்துடனான ஒரு போராட்டமாகும். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஜப்பானின் தற்காப்புப் படைகள் இணைந்துள்ளன. முடிந்தவரை காணாமல் போனவர்களை கண்டறிந்து மீட்பதற்கு நாங்கள் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் சனே தகைச்சி கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதி டோக்கியோவில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் (540 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
முக்கியமான பொது வசதிகள் அல்லது உள்கட்டமைப்புகளுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது; அதேவேளையில், அருகிலுள்ள மூன்று அணுமின் நிலையங்களிலும் எந்தவித அசாதாரணமான சூழலும் கண்டறியப்படவில்லை என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
யாட்சுஷிரோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பலத்த காயமடைந்த நிலையில் 40 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், குமாமோட்டோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு மேலும் 50 பேர் கொண்டு செல்லப்பட்டதாகவும் 'கியோடோ நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
கியூஷுவில் உள்ள பல முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்தன; பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் கண்டறியப்படாத நிலையில், புதன்கிழமை மீண்டும் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
அசோ குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டுள்ளது; அது எப்போது மீண்டும் செயல்படத் தொடங்கும் என்பது குறித்த உடனடித் தகவல் எதுவும் இல்லை.
அதேவேளையில், 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்னும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் முக்கிய சுற்றுலாத் தலமான குமாமோட்டோ கோட்டையின் கல் சுவர்களும் சேதமடைந்ததாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குமாமோட்டோ பகுதியில் 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பின் அதிர்வுகள் காரணமாக, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷின்ஜி கியோமோட்டோ கேட்டுக்கொண்டார்.
Summary
Japanese Prime Minister Sanae Takaichi said 13 people have been found dead after a powerful quake shook part
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






